‘செங்கோல்’ உருவாக்கிய உம்மிடி பங்காரு குடும்பத்தாருக்கு பதில் மரியாதை செய்த பிரதமர் மோடி!
தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில், தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் அதன் பின்னணியில் உள்ள ஆச்சர்யமூட்டும் தமிழர் வரலாறு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் சோழர் பாரம்பரியப்படி செங்கோல் நிறுவப்படும் என முன்னரே, மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தபடியால், அப்போதிருந்தே செங்கோல் பற்றிய அனல் பறக்கும் விவாதங்களும் சமூகவலைதளத்தில் ஆரம்பமாகி விட்டது.
வழக்கம் போல, ஆதரவு, எதிர்ப்பு என இருதரப்புவாதங்களும் முன்வைக்கப்பட்டன. இதனாலேயே கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் ’செங்கோல்’ என்ற வார்த்தைதான் டிரெண்ட்டிங்கில் இருந்து வந்தது.
பல எதிர்க்கட்சிகள் இந்த நாடாளுமன்றக் கட்டிட விழாவை புறக்கணித்தபோதும், இனிதே நடந்து முடிந்த இந்த நிகழ்வில், தமிழர்களால் உருவாக்கப்பட்ட செங்கோலும் முக்கிய இடத்தைப் பிடித்து விட்டது.
இந்த நிகழ்வில்..
- தமிழகத்தில் இருந்து 20 ஆதீனங்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
- அலகாபாத்திலிருந்து கொண்டுவரப்பட்ட செங்கோல், கங்கையின் புனித நீரால் தூய்மைப்படுத்தப்பட்டது.
- மங்கள வாத்தியம் நாகசுர இசைமுழங்க புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு செங்கோல் எடுத்து வரப்பட்டது.
- பின்னர், தமிழ் மந்திரங்களை ஓதி, வேத மந்திரங்களை அர்ச்சித்து நம் பாரதப் பிரதமர் மோடியிடம் ஐதீக முறையில் அந்த செங்கோல் ஒப்படைக்கப்பட்டது.
- வேளாக்குறிச்சி, திருவாவடுதுறை, தர்மாபுரம், குன்றக்குடி, திருவண்ணாமலை, பேருர் ஆகிய ஆறு ஆதீனங்கள் சேர்ந்து இந்தச் செங்கோலை பிரதமரிடம் வழங்கினர்.
செங்கோல்
தமிழர்களுக்கு செங்கோல் என்ற வார்த்தை ஒன்றும் புதிதானதல்ல. நம் மன்னர்கள் வரலாற்றில் நாம் அடிக்கடி படித்த, கேள்விப்பட்ட வார்த்தைதான் இது. மன்னராட்சி முடிந்து, ஆங்கிலேயர் வசமிருந்து விடுதலை பெற்று, இந்தியா மக்களாட்சி நாடாக மாறியபோது, நமது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் பெறப்பட்டதுதான் தற்போது புதிய நாடாளுமன்றத்தை அலங்கரித்து வரும் இந்த செங்கோல்.
அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த செங்கோல், தற்போது நாடாளுமன்றத்தில் சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது.
அக்காலத்தில் இந்த செங்கோலானது உம்மிடி பங்காரு செட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் உருவாக்கிய ஒன்று ஆகும். எனவே, அவர்களும் இந்த நாடாளுமன்றத் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் இந்த செங்கோலை திருவாவடுதுறை ஆதீனம் மோடியிடம் வழங்க, செங்கோலை உருவாக்கிய உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தினரை பிரதமர் மோடி பாராட்டினார்.
உம்மிடி பங்காரு குடும்பத்தார் மகிழ்ச்சி..
அதோடு, புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்காக செங்கோல் செய்து கொடுத்த உம்மிடி பங்காரு குடும்பத்தினரை பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன் உள்ளிட்டோர் பிரத்யேகமாக அழைத்து மரியாதையும் செய்தனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டது குறித்து, உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தின் முக்கிய உறுப்பினரான உம்மிடி அனில் குமார் கூறுகையில்,
“எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் கவுரவப்படுத்த பிரதமர் தனது வீட்டிற்கு எங்களை அழைத்திருந்தார். அப்போது நாங்களும் அவருக்கு திருக்குறள், தேவாரம், ஆதீன மடங்களின் வரலாறு உள்ளிட்ட சில முக்கிய நூல்களை பரிசாக வழங்கினோம். எங்கள் குடும்பத்தார் பத்து பேர் உட்பட மொத்தம் 50க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டோம். எங்களைப் பார்த்ததும் தமிழில் பிரதமர் வணக்கம் எனக் கூறி வரவேற்றது ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி அளித்தது.”
பின்னர், எங்கள் பெரியப்பாவின் அருகில் சென்று அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என விசாரித்தார். அவர் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார் என்பது வரை தெரிந்து வைத்துக் கொண்டு, அவரிடமும் தமிழிலேயே உடல்நலம் விசாரித்தார். ‘நீங்கள் விசாரித்த மகிழ்ச்சியிலேயே அவரது உடல்நிலை சரியாகி இருக்கும்’ என நாங்கள் பிரதமரிடம் நெகிழ்ச்சியுடன் கூறினோம்,’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “1947ம் ஆண்டு ஆதீனங்களுக்கு செங்கோல் வழங்கிய இடமான பழமையான வளாகம் பாரிமுனையில் உள்ளது. செங்கோலின் பாரம்பரியம் தொடங்கிய இடம் உம்மிடி துவாரக்நாத் ஜூவல்லர்ஸ். அந்த இடத்தைப் பாதுகாத்து கௌரவிப்பதில் நானும் என் குடும்பத்தினரும் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்,” என செய்தியாளர் சந்திப்பில் அனில்குமார் கூறியுள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் அனில்குமார் உம்மிடியின் மனைவி உம்மிடி அபர்ணா லக்ஷ்மி, மகன்கள் அனிருத்தா உம்மிடி மற்றும் பிரத்யும்ன உம்மிடி ஆகியோர் உடனிருந்தனர்.
உம்மிடி அனில் குமாரின் மகன் அனிருத்தா உம்மிடி பிரதமருடனான இந்தச் சந்திப்பு குறித்து கூறுகையில்,
“1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அசல் செங்கோல் குறித்து ஆய்வில் ஈடுபட்ட குடும்ப உறுப்பினர்களின் முக்கியப் பங்களிப்பை பிரதமர் மனதார பாராட்டினார். அவர்களின் விடாமுயற்சி மற்றும் நுணுக்கமான ஆராய்ச்சி இந்த வரலாற்று கலைப்பொருளை அங்கீகரிப்பதிலும் கொண்டாடுவதிலும் உச்சத்தை எட்டியுள்ளது. இது உம்மிடி குடும்பத்தினருக்கும் தேசத்திற்கும் மகத்தான கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது,” என்றார்.
செங்கோலின் வரலாற்றுப் பின்னணி
இந்தியாவே கொண்டாடும் வகையில், இன்று பேசு பொருளாகி இருக்கும் செங்கோல், தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு எப்படி, இந்திய நிலப்பரப்பின் ஆட்சி மாற்ற அடையாளமாக மாறியது? செங்கோலுக்கும் ஆதின மடத்திற்கும் என்ன சம்பந்தம்? என்ற வரலாற்றின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யக் கதை உள்ளது.
1947-ம் ஆண்டு, ஆகஸ்டு 15-ம் தேதி இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த சரித்திர நிகழ்வில், தமிழகத்தைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீன மடத்துக்குக் கிடைத்த பெருமையைப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதைத் தெரிந்துகொள்வோம்.
இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவது உறுதியானதும், அப்போது இந்தியாவின் கடைசி ஆளுநராக இருந்த மவுன்ட் பேட்டன், நேருவை அழைத்து, “இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கப்போகிறோம். அதை எப்படி அடையாளப்படுத்துவது?” எனக் கேட்டுள்ளார். இந்தக் கேள்விக்கு நேரடியாக பதில் கூறாத நேரு, மூதறிஞர் ராஜாஜியை அணுகி, “இதற்கு நீங்கள்தான் தீர்வு சொல்ல வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதற்கு ராஜாஜி, “தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சி மாற்றம் செய்யும்போது, ராஜகுருவாக இருப்பவர் செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து ஆசீர்வதிப்பது வழக்கம். நாமும் அதுபோல் இந்த ஆட்சி மாற்றத்தை மகான் ஒருவர் மூலம் செங்கோல் பெற்று அடையலாம்...” எனக் கூறியிருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக, அப்போது இந்தியாவின் சைவ மடங்களில் ஒன்றாக இருந்த திருவாவடுதுறை ஆதீன மடத்தின் 20-வது குருமகா சந்நிதானமாக இருந்த அம்பலவாண தேசிகரைத் (1937 - 1951) தொடர்புகொண்ட ராஜாஜி, ஆட்சி மாற்றத்துக்கான சடங்குகளைச் செய்துதரச் சொல்லிக் கேட்டிருக்கிறார்.
அந்த சமயத்தில் ஆதீனம் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தநிலையில், சென்னையில் பிரபலமாக இருந்த உம்மிடி பங்காரு செட்டியார் நகைக் கடையில் சைவச் சின்னம் பொறித்த தங்கத்திலான செங்கோல் ஒன்றைத் தயாரித்துத் தரும்படிக் கேட்டுக் கொண்டுள்ளார். பின்னர் அவர்கள் செய்து கொடுத்த செங்கோல், தனி விமானத்தில் டெல்லிக்கு சென்றுள்ளது.
அங்கு, 1947ம் ஆண்டு, ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு 11:45 மணிக்கு, மவுன்ட் பேட்டனிடமிருந்து செங்கோலை சடைச்சாமி பெற்று, அதன்மீது புனிதநீர் தெளித்து, இறை நாமம் உச்சரித்து, நேருவிடம் கொடுத்துள்ளார். இந்தியாவின் முதல் பிரதமர் நேரு கையில், சடைச்சாமி செங்கோலைத் தரும் அரிய புகைப்படம் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் இப்போதும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த செங்கோல்தான் பின்னாளில் அகமதாபாத் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் எவ்வித மாற்றமும் செய்யாமல், அதன் பழமை மாறாமல் மீண்டும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யத் தகவல்கள்
இந்த செங்கோலானது வெள்ளியில் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டது எனக் கூறப்படுகிறது. நந்தி, பத்மம், பீடம், கழுத்து, தண்டு என செங்கோலினை அதன் உருவத்தை வைத்து பல பாகங்களாகப் பிரிக்கலாம். இதில் மேலே உள்ள நந்தி ஆதீனத்தாரின் நந்தி பரம்பரையைக் குறிக்கிறது. இந்த செங்கோலைச் செய்ய, 1947ம் ஆண்டு ரூ.15 ஆயிரம் செலவானதாகக் கூறப்படுகிறது. இப்போது மதிப்பு சுமார் இரண்டு லட்சம் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
மூதறிஞர் ராஜாஜி கூறியதின் அடிப்படையில், திருவாவடுதுறை ஆதீனம் கூறிய டிசைனிலேயே இந்த செங்கோலை உம்மிடி குடும்பத்தார் செய்துள்ளனர். சுமார் ஒரு மாத காலம் செலவழித்து இதை செய்து முடித்துள்ளனர். மிஷினைப் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க கைகளாலேயே இதைச் செய்ததால், இவ்வளவு காலம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் தரப்படும் ‘சோழர் கால’ செங்கோல்: வரலாற்றுச் சிறப்பு என்ன?