இரவில் டீ ஸ்டால் நடத்தும் ஐஐடி மெட்ராஸ் மாணவர் - ‘நோக்கம்’ வருவாய் அல்ல!
பகலில் கல்லூரிக்குச் செல்லும் முகுல் ராகுல் இரவில் டீ ஸ்டால் நடத்துகிறார். இதன் நோக்கமும் தாக்கமும் வியப்புக்குரியது.
இந்தியாவின் வட மாநிலமான ஹரியானாவைச் சேர்ந்த முகுல் சாகர் சென்னை ஐஐடி-யின் எம்.டெக் நானோ டெக்னாலஜி மாணவர். இந்தியாவின் வடக்கில் பிறந்து தெற்கில் அறிவுக்கான தேடலில் ஈடுபட்டிருக்கும் இவரின் கதையில் ஐஐடி மெட்ராஸ் நிச்சயம் ஒரு திருப்பம் தரக்கூடியது. இவர் சென்னை ஐஐடியில் பகலில் மாணவர், இரவில் டீ விற்பனையாளர் என்றால் நம்ப முடிகிறதா?
பகலில் வகுப்புகளில் தவறாமல் பங்கேற்கும் முகுல், இரவில் சென்னை ஐஐடி வளாகத்திலேயே டீ விற்பனையாளராகவும் செயல்படுகிறார். கல்லூரிக்குள் இருக்கும் பேருந்து நிறுத்தமே அவரின் டீ ஸ்பாட். ஏன் அவர் டீ விற்க வேண்டும் என்று நீங்கள் யோசிக்கலாம். மற்றவர்கள் போல் டீ விற்பது அவரின் பார்ட் டைம் தொழில் அல்ல, மாறாக அது ஒரு ‘மிஷன்’!
முகுலின் மிஷன் என்ன?
சென்னை ஐஐடி தங்கும் விடுதிகளுக்கு இடையே குறுக்கு வழியில் அமைந்திருக்கும் முகுலின் டீ ஸ்டால் சக மாணவர்கள் தங்களின் படைப்பாற்றல் மற்றும் திறமைகளை மட்டுமல்ல, தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவும் உதவும் ஒரு கலங்கரை விளக்கம்.
முகுலின் டீ ஸ்டாலில் சூடான தேநீர் மட்டுமல்ல, ஒரு ஆர்ட் கேலரியாகவும் செயல்படுகிறது. இங்கு மாணவர்களின் கலைப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்கப்படுகின்றன. 70 - 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கலைப் படைப்புகள் விற்கப்படும் சந்தையாக மாற்றியுள்ளார்.
அதுமட்டுமல்ல, கூச்ச சுபாவம் உடையவர்களின் கூச்சத்தை போக்கும் மையமும் முகுலின் டீ ஸ்டால்தான். எப்படி என்றால், டீ ஸ்டாலில் இரவு நேரங்களில் கூடும் கூச்ச சுபாவம் கொண்ட சக மாணவர்களை படைப்பாளிகளாகவும், தொழில்முனைவோர்களாகவும் மாற்றுவதுதான் அவரின் முக்கிய நோக்கம்.
பதற்றம் மற்றும் லட்சியம் ஆகியவற்றின் கலவையான அவரின் இந்த இரவு நேர வாழ்க்கை முறையில் அவர் தனது கல்விக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், ஆக்கபூர்வமான நோக்கங்களுக்கு மத்தியில் கையாண்டு வருகிறார்.
முயற்சி பலனளித்ததா?
மாணவர்கள் தங்களின் மதிப்புகளை அதிகப்படுத்தி கொள்ளுதல், தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ளுதல், தொழில்முனைவோர் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல் ஆகியவையே முகுலின் முயற்சியின் நோக்கங்கள்.
வகுப்பறை கல்வி மட்டுமே போதாது என்பது முகுலின் எண்ணம். அதனால்தான் தனது டீ ஸ்டாலை ரியாலிட்டிக்கான கற்றலுக்கான ஆய்வகமாக கருதுகிறார்.
கற்றல் என்பது வகுப்பறைக்கு அப்பால் தனிப்பட்ட மற்றும் சமூக வளர்ச்சியின் பகுதிகளாக இருக்க வேண்டும் என்பதே அவரின் தத்துவம்.
முகுலின் முயற்சிகளுக்கு பலன் என்பது அவருக்கு வெகுமதியாக கிடைக்கும் நிதி அல்ல. மாறாக, மாணவர்கள் மத்தியில் தெரியும் மாற்றமே. டீ ஸ்டாலில் கூடும் மாணவர்கள், எதிர்பாராத நட்பை வளர்ப்பதில் இருந்து, கூச்ச சுபாவமுள்ள நபர்கள் தன்னம்பிக்கையான கலைஞர்களாக மாறுவது வரை தனிப்பட்ட வளர்ச்சிக்கும் சமூகக் கட்டமைப்பிற்கும் ஒரு முக்கிய காரணியாக மாறியுள்ளது என்று வகையில் முகுலின் முயற்சியானது மிகப் பெரிய பலன் கொடுத்துள்ளது.
மாணவர்கள் மத்தியிலும், கல்லூரி நிர்வாகத்தின் மத்தியிலும் வெகுவான ஆதரவு முகுலுக்கு கிடைத்து வருகிறது என்றாலும், ஆசிரியர்களின் ரேடாரின் கீழ் இருந்து வருகிறார். ஆசிரியர்களின் கண்காணிப்பு போன்ற சில தடங்கல்கள் இருந்தாலும், அதை தாண்டி எதிர்காலம் பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டார் முகுல்.
தனது முயற்சியின் பலன்களை கல்லூரியில் செயல்பட்டு வரும் கல்ச்சுரல் போன்ற மற்ற குழுக்களுக்கு நேரடியாக கொண்டு செல்ல வேண்டும் என்பதே முகுலின் எதிர்காலத் திட்டம்.
சவால்கள் என்னென்ன?
முகுல் டீ ஸ்டால் நடத்துவது எளிதான காரியம் அல்ல. அவர் தனக்கான தொழில்முனைவு, பிராண்ட் அடையாளம் மற்றும் சந்தை ஆகியவற்றில் தடைகளை சந்தித்தாலும், அவற்றை பாடங்களாக கற்பதாகவே குறிப்பிடுகிறார். தனக்கான நீண்டகால இலக்குகள் வேறாக இருந்தாலும் அவரின் தற்போதைய நோக்கம் ஒன்று மட்டுமே... ஒரு கப் டீ மூலம் மாணவர்களை ஒன்றிணைப்பதுதான் அது.
தனது எதிர்காலத்தை பொறுத்தவரை, அது கார்ப்பரேட் வேலையாக இருந்தாலும் சரி அல்லது தொழில்முனைவாக இருந்தாலும் சரி எதற்கும் தயராகவே இருப்பதாக கூறுகிறார் முகுல்.
தனது வேலையுடன் தனது கனவுகளையும் சமநிலையோடு கொண்டு செல்வதே முகுல் தனது அனுபவத்தில் மூலம் நமக்கு கற்பிக்கும் பாடம்.
மூலம்: Nucleus_AI
எம்பிஏ-வை பாதியிலே விட்டு டீக்கடை வைத்து, இன்று ரூ.4 கோடி டர்ன்ஓவர் வணிகமாக்கிய இளைஞர்!
Edited by Induja Raghunathan