மட்டன் பிரியாணி ரூ.200; பட்டாசு ரூ.600 - தேர்தல் பிரச்சாரத்திற்கு ரேட் கார்ட் வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் பொருட்களுக்கான விலை விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, இந்தியா முழுவதும் தேர்தல் வேலைகள் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டன. கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, வேட்புமனுத் தாக்கல், பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள் என தேர்தல் திருவிழாவைக் கொண்டாடக் கட்சிகள் முழு வீச்சில் ஆயத்தமாகி வருகின்றன.
தேர்தல் திருவிழா
வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில், முதல் கட்டமான ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே தமிழகத்தில் உள்ளதால், தேர்தல் வேலைகளும் இரண்டு மடங்கு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து வருகின்றன. இதில் களம் காண வாய்ப்பு கிடைத்திருக்கும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.
சூடு பிடிக்கும் பிரச்சாரம்
எப்படியும் தேர்தலில் ஜெயித்தாக வேண்டும் என்ற நோக்கத்தில், களத்தில் உள்ள வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள், வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு வகையில் பிரசாரங்களை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிட்டன என்பதால், பணப்புழக்கத்தை தேர்தல் ஆணையம் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கி விட்டது..
தேர்தல் ஆணையம் கிடுக்குப்பிடி
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்கப்படும் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், உணவு, போக்குவரத்து உட்பட தேர்தல் செலவினங்களுக்கு அதிகபட்சம் ரூ.95 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில், மக்களவைத் தேர்தலில் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவை சென்னை மாநகராட்சி நிர்ணயித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பாக பயன்படுத்தும் பொருள்களின் அதிகபட்ச விலை விவரங்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பட்டியலில் கூறப்பட்டிருப்பதாவது :
- ஒருநாள் பந்தல் அமைப்பதற்கு ரூ.1,500 முதல் ரூ.3,500 வரை
- சுவரொட்டிகளுக்கு ரூ.6,500 முதல் ரூ.12,500 வரை
- சால்வை ஒன்றுக்கு ரூ.150
- குதிரையை வாடகைக்கு எடுத்தால் 4 மணி நேரத்திற்கு ரூ.6,000
- பட்டாசு ரூ.600
- கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஏற்பாடு செய்தால் 3 மணி நேரத்திற்கு ரூ.10,000 என்று கணக்கில் கொள்ளலாம்.
- மேடை முன்பு தோரண அலங்காரம் அமைப்பதற்கு ஒரு மீட்டருக்கு ரூ.310,
- வாழை மரம் ஒன்றுக்கு ரூ.700
- இசைக்குழு வாடகைக்கு 4 மணி நேரத்திற்கு ரூ.4,500,
- பலூன் அலங்காரம் அமைக்க ஒரு பலூனுக்கு ரூ.6 செலவு செய்யலாம்.
- ஒரு கிலோ பிளீச்சிங் பவுடர் ரூ.90,
- பூசணிக்காய் ஒன்றுக்கு ரூ.120
- தொப்பி ஒன்றுக்கு ரூ.50,
- பூ மாலை பெரியது ரூ.400, சிறியது ரூ.250
- பேப்பர் மாஸ்க் ரூ.3,
- சிறிய பூங்கொத்துக்கு ரூ.150,
- சிறிய அளவிலான துண்டுக்கு ரூ.84,
- பெரிய அளவிலான துண்டுக்கு ரூ.305,
- தேங்காய் ஒன்றுக்கு ரூ.30,
- எலுமிச்சை பழம் ஒன்றுக்கு ரூ.5
- மட்டன் பிரியாணிக்கு ரூ.200, சிக்கன் பிரியாணிக்கு ரூ.150, வெஜ் பிரியாணிக்கு ரூ.100
- பால் ரூ.20,
- சாப்பாடு ரூ.100,
- டீ ரூ.15, காபி ரூ.20,
- தண்ணீர் கேன் ஒன்று ரூ.35,
- தண்ணீர் பாட்டில் ரூ.20,
- நீர் மோர் ரூ.20,
- குளிர்பானம் ரூ.15
- 5 நட்சத்திர விடுதிகளில் குளிர்சாதன அறையில் தங்க ரூ.19,500
- வாகனம் வாடகைக்கு எடுக்கும்பட்சத்தில் குறைந்தபட்சம் ரூ.1,150, அதிகபட்சமாக ரூ.8,500 (டிரைவர் வாடகை, எரிபொருள் உட்பட)
என இவ்வாறு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.